பாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு
கன்னியாகுமரி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பாஜக காணொலி பேரணி நடத்துகிறது.
இந்த காணொலி பேரணியில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்று இந்தியாவை காக்க உழைத்து வரும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், கொரோனாவை துரத்தியடிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகளே போற்றுவதாக அவர் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி இனி பப்பு அல்ல... நாளை அவருக்கு 50-வது பிறந்தநாள்... தேசியத்தலைவராக உருவெடுத்த கதை
காணொலி பேரணி
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் சனிக்கிழமையன்று காணொலி பேரணி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மத்திய அமைச்சர் இந்த காணொலி பேரணியில் பங்கேற்று மோடி அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள். அந்தவகையில் தமிழகத்தில் நடைபெறும் காணொலி பேரணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
எண்ணற்ற சாதனைகள்
இந்நிலையில் இந்த காணொலி பேரணியை அனைவரும் பார்க்க வேண்டும், மத்திய அரசின் சாதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அதில் பேசியுள்ள அவர், நாட்டில் நீண்ட ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக்கிற்கு முடிவு கட்டியது என எண்ணற்ற சாதனைகளை கடந்த ஓராண்டில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ளதாக கூறினார்.
துரத்தியடிப்பு
இதனிடையே துரதிர்ஷ்டவசமாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டதாகவும், அதனை துரத்தியடிக்க பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகள் போற்றுவதாகவும் கூறினார். மேலும், சீனாவை வெல்லும் ஆற்றல் நமக்கு உள்ளதாகவும், பிரதமர் மோடியின் கரத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் தனது வீடியோ பதிவில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கட்டாயம்
மக்களுக்கு மத்திய அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் விளக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்காக தான் காணொலி பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த காணொலி பேரணியில் தமிழக மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் நலப் பணிகளை அறிந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.