இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே.. அப்போது ஏன் போராடலை.. திருவட்டாரில் எச். ராஜா கேள்வி
சிஏஏவுக்கு ஆதரவாக எச். ராஜா பேசினார்
கன்னியாகுமரி: "பாகிஸ்தானில் இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே... அப்போது இங்கு ஏன் யாருமே போராடவில்லை. இப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மட்டும் போராடுகிறார்களே? இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம் லீக், திமுக இரண்டுமே இரட்டை குழந்தைகளாக செயல்படுகிறார்கள்.. ஆனால் இந்த சட்டத்தினால் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எனினும் இதே தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.. இதற்காக நோட்டீஸ்கள் வழங்கி, பேரணி நடத்தி ஆதரவு கருத்துக்களை பரப்பி வருகிறது.
ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை- தேசவிரோதம் என மத்திய அரசு மீது சு.சுவாமி பாய்ச்சல்
இந்து முன்னணி
அந்த வகையில், திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொதுகூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் இந்த விழா நடந்தது.. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளரும் கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சிறுபான்மை
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து வருபவர்களுக்குதான்... அங்கு மதரீதியாக துன்பப்படுவர்களை, நம் நாட்டில் ஏற்றுக்கொள்வதுதான் இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம்... அதனால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது.. ஏற்படாது! இங்குள்ள சிறுபான்மையினருக்கு ஏராளமான சுதந்திரம் உள்ளது. இந்தியாவில்தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட.. முடிகிறது. தேவாலயங்கள், மசூதிகள் அந்தந்த மதத்தினரிடமே உள்ளன.
கோயில்கள்
ஆனால் இந்து கோவில்களின் நிர்வாகமோ அரசிடம் உள்ளது. அன்றைக்கு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அங்கு வெறும் 17 சதவீதம் இந்துக்களே இருந்தனர். ஆனால் இன்றைக்கு ஒன்றரை சதவீதம் இந்துக்கள் கூட அங்கு இல்லை. இதேதான் வங்க தேசத்திலும்... 27 சதவீதம் இந்துக்கள் அங்கு இருந்த நிலையில், இன்று ஏழரை சதவீதம் இந்துக்கள்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்து பெண்களை நிர்வாணப்படுத்தினார்களே... அப்போது இங்கு ஏன் யாருமே போராடவில்லை.
இரட்டை குழந்தைகள்
ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மட்டும் போராடுகிறார்கள். இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம் லீக், திமுக இரண்டுமே இரட்டை குழந்தைகளாக செயல்படுகிறார்கள். இந்த சட்டத்தால் நம் நாட்டில் ஒரு சதவீதம் கூட சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லாதபோது, இவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாகதான் இருக்கிறது.. மதரீதியாக மக்களை பிரிக்கத்தான் இந்த போராட்டங்கள் எல்லாம்!" என்றார்.