இந்தியை கற்றுக்கொடுக்கக் கோரி தமிழகம் போராடும்... இல.கணேசன் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இந்திமொழியை கற்றுக்கொடுக்கக் கோரி மாணவர்கள் போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும், விரைவில் இந்திக்கு ஆதரவாக அவர்கள் போராடும் சூழல் உருவாகும் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதே பாஜகவின் இலக்கு எனத் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி சுமூகமாக உள்ளதாகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்த அதிமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறினார்.
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தான் எங்கள் ஆதரவு என்பதை பாஜக தலைமையே இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்காக மோடி சென்னை வந்தபோது கூட,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கேட்டதற்கு முரளிதரராவிடம் பேசுங்கள் என சொல்லிவிட்டு போய்விட்டார். முரளிதரராவும் மேலிடத்தில் பேசி முடிவெடுத்தபின் கூறுவதாக கூறினார்.
ஹரியானா தேர்தல்: காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி யுத்தம்.. பாஜகவுக்கு தாரை வார்க்கப்படும் வெற்றி?
இந்நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இல.கணேசன் அதிமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறுகிறார். இதனிடையே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடம் கூட்டணியை தொடர்வோம் என்றும், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அகில இந்திய அளவில் பாஜக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுவதாகவும், அது முடிந்த பின்னர் டிசம்பரில் தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படலாம் என இல.கணேசன் கூறினார். அவர் கூறுவதை வைத்து பார்த்தால் இன்னும் 3 மாதத்திற்கு தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படமாட்டார் என்பதை உணர்த்துகிறது.