வைகோ… அவர்களே… மறுபடியும் சொல்றேன்.. மோடிக்கு கருப்புக்கொடி காட்டாதீங்க.. பொன்.ராதா கோரிக்கை
Recommended Video
கன்னியாகுமரி:கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு வைகோ கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று தாம் மீண்டும் கேட்டுக் கொள்வதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அன்றைய தினம் 11 மணியளவில் மோடியின் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் பந்தல் மற்றும் மேடையை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். அவருடன் தமிழக அரசுக்கான டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தார்.
பின்னர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:குமரிக்கு வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு
கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என வைகோவிற்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து கொள்கிறேன்.
அரசு நிகழ்ச்சியை வைத்து ஆதாயம் தேடும் தேவை பாஜகவிற்கு இல்லை. தேமுதிக விரைவில் பாஜக கூட்டணிக்கு வரும். விஜயகாந்த் ஸ்டாலின் சந்திப்பை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
இந்தியாவைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இன்றைய நிலையில் எனக்கு தெரிந்து அதிமுக தான் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி என்று அவர் கூறினார்.