ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்.. குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. குமரியில் ராகுல் அதிரடி!
கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர் என்று காங்கிரஸ் தலைவர் கன்னியாகுமரியில் பேசி இருக்கிறார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியது. கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
இதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் ராகுல் காந்தி பேசினார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்று இருந்தார்.
இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்திதான்- ஸ்டாலின் தடாலடி
ராகுல் பேச்சு
ராகுல் காந்தி தனது பேச்சில், மு.க ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர். நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன். அவரை சந்தித்து எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது. கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.
கருணாநிதி நினைவு
கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார். அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர் கருணாநிதி. 2019 தேர்தல் தமிழக மக்களின் உரிமை குரலாக இருக்கும்.
மோடியின் கைப்பாவை
தமிழக அரசு மோடியின் கைப்பாவையாக உள்ளது. தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. மத்தியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை அவர் அடக்கி ஆள்கிறார். அவரால் தமிழ்நாட்டை இனியும் கட்டுப்படுத்த முடியாது.
செய்ய மாட்டார்கள்
தமிழக மக்கள் அதை எப்போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள். உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள். பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை. மோடி ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை. மக்களை வறுமையில் தள்ளி இருக்கிறார் மோடி.
டெல்லி விவசாயிகள்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடினார்கள். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடினார்கள். பணக்காரர்கள் வளர வேண்டும் என்று மோடி போராடுகிறார். ஏழைகளை மோடி மறந்துவிட்டார், அவர் பணக்காரர்களுக்கான பிரதமர்.
ஏழை
ஏழைகளை ஏமாற்றிவிட்டு, பணக்காரர்களை கொண்டாடுகிறார் மோடி. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்காமல் ஏமாற்றிவிட்டார் மோடி. மோடி தன்னை ஒரு காவலாளி என்று கூறுகிறார். ஆனால் அதே காவலாளிதான் திருடனாக செயல்பட்டு இருக்கிறார், என்று ராகுல் காந்தி பேசினார்.