திமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக கூலிப்படையை ஏவி கத்தி அரிவாள் மூலமாக பஜகவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது என்று கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீரவநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சனையில் பாஜகவினரை திமுகவினர் கத்தியால் தாக்கியதில் பாஜகவை சேர்ந்த மணிகண்டன், சதீஷ், பழனியப்பன், சரவணன், ரமேஷ் மற்றும் ஆரல்வாய் மொழி பகுதியை சேர்ந்த சுப்பையா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதனிடையே சிகிச்சை பெற்று வரும் பாஜகவினரை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சரும் குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரியில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை, அரசியல் போட்டி இருக்கலாம் ஆனால் அராஜகத்தை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது. திமுக கூலிப்படையை ஏவி கத்தி அரிவாள் மூலமாக பஜகவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது.
மிருகத்தனமான செயலில் ஈடுபட்டு திமுக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது. இதுவரை ஹோட்டல்களில் ஏறி புரோட்டா ஜூஸ் போன்றவற்றை சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட பொருட்களுக்கு காசு கொடுக்காமல் கடையின் கல்லாவில் இருக்கும் பணத்தை பிடுங்கியும் திருடியும் சென்றனர். அந்த செயல்களில் ஈடுபட்டு திமுகவினரை அக்கட்சி தலைவர் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்.
அதோடு பாதிக்கப்பட்டவரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தார் திமுக தலைவர், இதனை விட ஒரு பெரிய அவமானம் திமுக தலைவருக்கு இருக்க முடியாது. மகா மட்டரகமான அரசியலை திமுக கையாள்கிறது. திமுகவின் அராஜக நிலை மாற வேண்டும் என்றால் திமுகவை பயங்கரவாத இயக்கமாக நினைத்து தமிழக மக்கள் திமுகவை புறம் தள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும், உள்ளாட்சி துறைகளை கைப்பற்ற வேண்டும் என்ற திமுகவின் கனவு தகர்த்தெரியப்பட வேண்டும், தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.