இந்தோனேஷியாவுக்கெல்லாம் அனுதாப செய்தி அனுப்பிய மோடி.. தென் தமிழகத்துக்கு என்ன செய்தார்- துரைமுருகன்
Recommended Video
கன்னியாகுமரி: இந்தோனேஷியா சுனாமி, ஜப்பான் புகம்பம் என வெளிநாடுகளில் எது ஏற்பட்டாலும் அனுதாப செய்தி வெளியிடும் பிரதமர் மோடி கஜா புயல் பாதிப்பை நேரில் பார்க்காவிட்டாலும் ஒரு அனுதாப செய்தியாவது வெளியிட்டிருக்கலாம் என துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
கஜா புயலால் நெற்களஞ்சிய மாவட்டங்களே கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கேரள வெள்ளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி தமிழகத்தில் நடந்த துயரை நேரில் வந்து பார்வையிடவில்லை என்பது எதிர்க்கட்சிகள், மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு கூட்டம் நேற்று கன்னியாகுமரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
விஜயபாஸ்கர்
அப்போது அவர் கூறுகையில் ஊழல் குற்றச்சாட்டை சுமந்து கொண்டிருக்கும் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது அவ்வளவாக நாகரிகம் இல்லை. முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
நிவாரணம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு இப்போதாவது அனுமதி கொடுத்ததே அதுவே மகிழ்ச்சியாக உள்ளது. கஜா புயலுக்கு நிவாரணம் கொடுப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
அனுதாப செய்தி
கேரளத்தில் வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். அதுபோல் ஜப்பான், இந்தோனேஷியா, அமெரிக்காவில் ஏதேனும் அசம்பாவிதம் என்றால் டுவிட்டரில் அனுதாப செய்தி வெளியிடுகிறார்.
விமர்சனம்
ஆனால் நம் தமிழகத்தில் டெல்டா மாவட்டமே கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு வந்து ஆய்வு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு அனுதாப செய்தியையாவது வெளியிட்டிருக்கலாம். தமிழகம் மீது பிரதமருக்கு எத்தனை அலட்சியம் என்று துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.