எடத்துவா தேவாலயத்தில் கோலாகல திருவிழா.. செங்கல் சுமந்து நூதன முறையில் நேர்த்தி கடன்
Recommended Video
கன்னியாகுமரி: கேரள மாநிலம் ஆலப்புழையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த எடத்துவா தேவாலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கல் சுமந்து நூதன முறையில் நேர்த்தி கடன் செலுத்தினர்.
இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாயலத்தில், 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கேரள மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் தென்மாவட்ட மக்களும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் மலையாள மொழியில் திருப்பலி நடைபெறுவது போல் தமிழிலும் திருப்பலி நடைபெறுகிறது.
மொழி பாகுபாடின்றி மலையாள மக்களுக்கு நிகராக தமிழக மக்களுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு வழிபடச் செல்லும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்களும் செங்கல் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தும் நூதன முறையை நீண்ட காலமாக கையாண்டு வருகின்றனர்.
தங்கள் குடும்ப இன்னல்களை போக்கவும் திட்டமிட்ட பணிகள் இடையூறின்றி நிறைவேறவும் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் தேவாலயத்தின் முன்பிருந்து தங்களால் சுமந்து செல்லும் எடைக்கேற்ப செங்கற்களை தலையில் ஏந்தி பிரார்த்தனை செய்த வண்ணம் தேவாலயத்தை சுற்றி வருகின்றனர்.
இந்த நூதன நேர்த்தி கடனில் சிறியோர், பெரியோர் வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன் பங்கேற்று வருவது வித்தியாசமான நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கு தென் தமிழகத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபட சென்று வருகின்றனர். வண்ண, வண்ண அலங்காரங்களால் இரவு நேரத்தில், பழமை வாய்ந்த எடத்துவா தேவாலயம் ஜொலிக்கிறது. பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.