Exclusive: எடப்பாடி பழனிசாமி நல்ல பெர்ஃபார்மர்... பாராட்டுப்பத்திரம் வாசிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: திமுக கூட்டணியில் பாஜக இணைவதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
கூட்டணி தொடர்பாக தான் பொதுப்படையாக கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே ஒன் இந்தியா தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: வரும் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் எனக் கூறியிருக்கிறீர்கள், அதனை எப்படி எடுத்துக்கொள்வது?
பதில்: கூட்டணி தொடர்பாக நான் கூறியது பொதுப்படையானது. நான் எந்த இடத்திலும் பாஜக கூட்டணி மாறும் எனக் குறிப்பிடவில்லை. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன். திமுகவுடன் இருக்கும் சிறிய கட்சிகள் அதிமுகவுக்கு செல்லலாம், அதிமுகவுடன் இருக்கும் சிறிய கட்சிகள் திமுகவுக்கு செல்லலாம். இப்படித்தான் மாற்றம் இருக்கும் எனக் கூறினேன்.
கேள்வி: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா?
பதில்: என்னை பொறுத்தவரை எக்காரணத்தைக் கொண்டும் திமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை. திமுக-பாஜக கூட்டணி பற்றிய சிந்தனையே எங்களிடம் இல்லை. திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் கேட்ட கேள்விக்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இதனிடையே கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு மட்டுமே இருக்கிறது.
கேள்வி: அதிமுக கூட்டணியில் பாஜக தொடருமா..? இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது போல் தெரிகிறதே?
பதில்: கூட்டணியில் தொடரக்கூடாது என நான் சொல்ல மாட்டேன். அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்துவேறுபாடுகள் என்பது அரசாங்க ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கருத தேவையில்லை.
கேள்வி: அதிமுகவின் உட்கட்சி குழப்பத்திற்கு காரணம் பாஜக தான் என்ற விமர்சனம் உள்ளதே, அதற்கு உங்கள் பதில்?
பதில்: பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எந்தநிலையிலும் அடுத்தக்கட்சி விவகாரத்தில் தலையிட்டதில்லை. எங்களை நாங்கள் வலிமைப்படுத்தும் பணிகளை மட்டுமே செய்து வருகிறோம். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கேள்வி: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், அது பற்றிய தங்கள் கருத்து?
பதில்: முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துகள். அதிமுகவில் பிளவு வந்துவிடாதா என ஓநாய் போன்று காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனையை மிக சுமூகமாக தீர்த்துள்ளார்கள். இதற்காக ஓ.பி.எஸ். அண்ணனுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி: முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு நீங்கள் அளிக்கக்கூடிய மதிப்பெண் என்ன?
பதில்: மதிப்பெண் என்று எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏற்ப ஏற்ற இறக்கம் இருக்கும். ஓவர் ஆலாக பார்க்கும் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகளை பொறுத்தவரை மற்ற மாநில அரசுகளை விட தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. மதிப்பீடு என குறிப்பிடவிரும்பவில்லை அதிமுக அரசுக்கு எனது பாராட்டு.
கேள்வி: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட பணிகளை தொடங்கிவிட்டீர்கள் போல் தெரிகிறதே?
பதில்: கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தான் போட்டியிடும். யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பாஜகவின் கடைநிலை ஊழியன் நான். அந்தவகையில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன்.