கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது
கன்னியாகுமரி: முன்னாள் எம்எல்ஏவும் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான குமாரதாஸ் இன்று மாலை காலமானார். நெஞ்சு வலி காரணமாக குமாரதாஸ் உயிரிழந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் தற்போது காலமாகியுள்ள குமாரதாஸ்.
கடந்த 1984, 1991, 1996, 2001 உள்ளிட்ட ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக நான்கு முறை இருந்தவர் குமாரதாஸ்.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக குமாரதாஸ் பதவி வகித்து வந்தார். இவர் ஜனதாதளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கடைசியாக மீண்டும் வாசன் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இடையில் கடந்த டிசம்பர் 2002ம் ஆண்டில், தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கட்சியையும் குமாரதாஸ் உருவாக்கினார்.
இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது இரு முறை ஜனதா தளம் சாா்பிலும், இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.
1984-ம் ஆண்டு மற்றும்1991 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.