இரணியல் அருகே புதுமாப்பிள்ளையை கொன்ற நண்பர் கைது.. விசாரணையில் பரபர தகவல்கள்
Recommended Video
இரணியல்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு நேற்று முன் தினம் காலை தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள கடேற்றி பகுதியை சேர்ந்த விஜீஸ் (31) என்று தெரிய வந்தது.
எதற்காக கொலை
விஜீஸ் கொலையுண்ட இடத்தில் கத்தி உள்ளிட்ட எந்த ஆயுதமும் சிக்கவில்லை. அந்த இடத்தில் கொலையாளிகள் எதையும் விட்டுச் சென்றிருக்கவில்லை. இதனால் போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டது.போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பெண் வீட்டார் எதிர்ப்பு
விஜீஸ் காதல் கல்யாணம் செய்து கொண்டவர். 5 -மாதங்களுக்கு முன் தான் காதலித்த பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி கடத்தி திருமணம் செய்துள்ளார். இதனால் விஜீஸ் கொலையில் பெண் வீட்டாருக்கு தொடர்பிருக்குமா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
சிக்கிய கொலையாளி
இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நெல்சன் (32) என்ற தொழிலாளியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், விஜீசும், நானும் நண்பர்கள். ஆனால், அடிக்கடி எங்களுக்கு இடையே தகராறு வரும் பின்னர் நாங்கள் சமரசம் ஆகி விடுவோம். சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
தகராறு
இந்த நிலையில், விஜீஸ் மீண்டும் என்னை தேடி வந்தார். இருவரும் சேர்ந்து மது குடிக்க குருந்தன்கோடு பகுதிக்கு சென்றோம். போதை தலைக்கு ஏறியதும் விஜீஸ் என்னையும், எனது தாயாரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். இதை கேட்டதும் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனே, நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து கொண்டு வந்து விஜீசை தேடினேன்.
வெட்டினேன்
நான் தேடி சென்ற போது, விஜீஸ் குருந்தன்கோடு குளக்கரை அருகே வந்தார். அங்கு அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். விஜீஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததை உறுதி செய்து கொண்டு தப்பி ஓடினேன் என்றார் நெல்சன்