பொங்குகிறது குமரி கடல்.. உயர உயர எழும் அலைகள்.. மிரட்சியில் மீ்னவர்கள்!
கடல் அலை உயர எழுந்து வருவதால் குமரி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குமரி: பொங்கி கொண்டிருக்கிறது குமரி கடல்! உயரமாக எழுந்து எழுந்து அடங்கும் கடல் சீற்றத்தை கண்டு மீனவர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
இந்த மாதம் ஆரம்பித்த நாளிலிருந்தே கடல் சீற்றமாகத்தான் உள்ளது. ஆனால் கடந்த 2 நாளாக இது இன்னும் அதிகரித்துள்ளது.
இதனால் மீனவ கிராம மக்களை பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கடற்கரை ஆலய பங்கு தந்தையர்கள் ஸ்பீக்கர்கள் மூலம் அறிவுறுத்தினார்கள்.
நாட்டுப்படகுகள்
அதனால் யாரும் சரியாக மீன்பிடிக்ககூட போகவில்லை. தங்கள் படகுகளையும் 30 அடி தொலைவில் பாதுகாப்பாக இழுத்து வந்து நிறுத்தினர். ஆனாலும் நேற்று அதிகாலை கடலின் ஆக்ரோஷம் அதிகரித்துவிட்டது. 2 மணியளவில் கடல் அலைகள் கரைப்பகுதிக்கு வந்து, நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள், வள்ளங்களை அடித்து இழுத்து கொண்டு போனது.
பயமுறுத்திய அலைகள்
கிட்டத்தட்ட 12 படகுகள் மாயமாகி கிடந்ததால், மீனவர்கள் கதி கலங்கி துடித்து போய்விட்டனர். அலைகள் இழுத்து சென்றதை அறிந்த அவர்கள், எப்படியாவது படகுகளை மீட்கலாம் என முயற்சி செய்தார்கள். ஆனால் அலைகள் உயரமாக எழுந்து மீனவர்களை பயமுறுத்தியதால் படகுகளை மீட்க முடியாமலும் அதன் உடைந்த பாகங்கள் மட்டுமே கையில் சிக்கியதாலும், அவைகளை எடுத்து கொண்டு கலங்கிய கண்களுடன் கரை திரும்பினர்.
வெளியேறிய மக்கள்
இவை தவிர, கரையில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட படகுகளும் ஒன்றோடொன்று முட்டி மோதி சேதமாகி விழுந்து கிடக்கின்றன. பள்ளம் பகுதி மக்கள் இந்த சீற்றத்தை கண்டு பயந்து வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். தெரிந்தவர்கள், உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
ராட்சத அலைகள்
படகுகள் பறிபோனது குறித்து அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ராட்சத அலைகள் அவ்வப்போது எழுந்து ஊருக்குள் நுழையும் அபாயமும் இருப்பதால் மீனவ மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.