கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வசந்தகுமார் காலமானார்.
இதனால் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர்களாக அடிபடுகிறது. காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் பெயரும் சொல்லப்படுகிறது.
சாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக?
தினமும் 2,000 பேர் இணைகின்றனர்
இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் பங்கேற்று பேசியதாவது: கன்னியாகுமரியில் பாஜக விதைத்த விதை இன்று விருட்சமாக சென்னை வரை வளர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2,000 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர்.
கறுப்பர் கூட்டத்தை விரட்டுவோம்
தமிழ்க் கடவுளான முருகனை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியது. கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டியடிப்போம். கறுப்பர் கூட்டத்தின் செந்திலுக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு என கேட்ட கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை பதில்தரவில்லை. திமுகவில் 1 கோடி இந்துக்கள் உள்ளனரே.. அப்படியானால் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாதா? சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது?
பாஜக மட்டுமே பாடுபடுகிறது
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி எதனையும் கற்பிக்க மாட்டோம் என அறிவித்து அட்மிஷன் போட முடியுமா? கொரோனா காலத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள்தான் இன்று வரையும் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சராவது நிச்சயம்
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தொகுதியில் வெற்றி பெறும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நிச்சயம் மத்தியில் அமைச்சராவார். ஆகையால் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு எல். முருகன் பேசினார்.