அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரி: குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும்.
சமீபத்தில், கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்ட காலத்திலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வந்தது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி பிற மாவட்டத்தில் இருந்தும், கேரள போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளதால், திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து, ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வருகை தந்து, அருவியில் குளித்தும், படகுசவாரி செய்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும், மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோதையார், பேச்சிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி பகுதிகளில் மழை பெய்துவருவதால், அருவிக்கு நீர்வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றால சீசனை நினைவு கூறும் வகையில் திற்பரப்பில் அவ்வப்போது மழையும், மிதமான காற்றும் வீசி வருகிறது. மேகமூட்டமும் அடர்ந்து காணப்படுவதால், ரம்யமான சூழல் நிலவுகிறது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.