தொடரும் சோதனை.. குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு!
குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி: குமரி காங். வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்எல்ஏ எச். வசந்த குமார். இவர் இப்போது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தீவிரமாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க இன்றும் பல இடங்களை, ஐடி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக எதிர்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடக்கிறது.
அதன் ஒருகட்டமாக காலையில்தான் அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் முறையான ஆவணம் இல்லாத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது .
இந்த நிலையில்தான் தற்போது வசந்தகுமாரின் உறவினரிடம் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். வசந்தகுமாரின் மைத்துநரான காமராஜ் என்பவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கு சோதனை நடந்து வருகிறது.
அதேபோல் வசந்தகுமாருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் ஐடி துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காரணமாக குமரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.