உதயநிதியை சந்திக்கவில்லை, ஓவைசி கட்சி- நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் நறுக் பதில்
கன்னியாகுமரி: திமுகவுடனான தேர்தல் கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தாம் ரகசியமாக சந்தித்து பேசியதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல் ஓவைசி கட்சி, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதையும் கமல்ஹாசன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தூத்தூர் பகுதியில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.
அப்போது, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தகவல்கள் வந்துள்ளனவே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எந்த ஒருதிட்டவட்டமான பதிலையும் சொல்லாமல் குழப்பமாகவே கமல்ஹாசன் கூறி முடித்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுக பகுதியில் மீனவர்கள் அடிக்கடி பலியாகும் துறைமுக முகத்துவார பகுதியை கமல்ஹாசன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்:
உதயநிதியுடன் பேசுனீங்களா?.. "குழப்பி.. மழுப்பி.. உழப்பி".. கமல் சார்.. எங்க கபாலம் கலங்கிப் போச்சு!
ஈழத்துக்கு குரல் கொடுப்பேன்
கேள்வி: எம்ஜிஆர் வழியில் தமிழ் ஈழத்திற்கு குரல் கொடுப்பீர்களா? அதை பாலோ பண்ணுவீங்களா? பதில்: பண்ணவேண்டியது வந்தால் பண்ணுவேன். இப்பவு அங்க தேவை இருக்கிறது. இலங்கையில் தமிழ் போர்டுகளை எடுத்துவிட்டு சீன பலகைகளை வைக்கின்றனர். அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
உதயநிதியை சந்திக்கவில்லை
கேள்வி: உதயநிதி ஸ்டாலினை நீங்க ரகசியமாக சந்தித்ததாக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறதே? பதில்: நான் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.. டைரக்டாகவே சந்திப்பேன்; கேள்வி: 40 தொகுதிகள் கேட்டதாக சொல்லப்படுகிறதே? பதில்: இல்லைங்க..அது ஊடகங்கள் வழிவந்த நீங்கள் சொன்ன செய்திதான் அது. கேள்வி: இதை நீங்க கண்டிப்பாக மறுக்கிறீங்களா? பதில்: நான் கண்டிப்பாக இதை மறுக்கிறேன்.
கேரளா முடிவுகளால் மகிழ்வு
கேள்வி: கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீங்க? பதில்: திறமையாக ஆள்பவர்களை மக்கள் நேசிக்கிறார்கள். நல்ல ஆட்சியை தருபவர்களுக்கு தொடர்ந்து வாக்களிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இது எங்களைப் போன்றவர்களுக்கு பெரும் சந்தோசத்தை தருகிறது.
டெல்லி விவசாயிகள் போராட்டம்
கேள்வி: டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக? டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு முதல் முதலில் தமிழகத்தில் ஆதரவு கொடுத்த கட்சி மக்கள் நீதி மையம்.. எங்க கட்சி பிரதிநிதிகள் டெல்லிக்கே சென்று ஆதரவு தெரிவித்தனர்.
ரஜினி கூட்டணி- ரசிகர்கள் மகிழ்ச்சி
கேள்வி: ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இரண்டு பேரும் இணைவதை இங்குள்ள அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்கிறாங்கன்னு நினைக்கிறீங்க? இணைய முடியும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீங்க? அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். ரசிகர்களோ சந்தோசமாக ஏற்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி நியமனம்
கேள்வி: ரஜினிகாந்த் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆர்.எஸ்.எஸ்.காரர் நியமிக்கப்பட்டுள்ளாரே? பதில்: முதல் முறையாக கட்சி ஆரம்பிக்கும் போது ஏற்படும் தடுமாற்றங்களாக இதை பார்க்கிறேன்.
ஓவைசி, நாம் தமிழருடன் கூட்டணி இல்லை
கேள்வி: ஓவைசி கட்சி, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக சொல்கிறார்களே? பதில்: இல்லைங்க.. இதெல்லாம் ஊடகங்கள்தான் சொல்கின்றன. எந்தவிதமான முடிவும் என்னுடைய மேற்பார்வையில்தான் நடைபெறும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.