"இங்கிலீஷில்தான் பேசுவியா.. தமிழ் வராதா".. ஒருமையில் திட்டிய டிஎஸ்பி.. விஷத்தை குடித்த திமுக டாக்டர்
கன்னியாகுமரி திமுக பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
கன்னியாகுமரி: "ஏன் இங்கிலீஷில்தான் பேசுவியா? தமிழில் பேச மாட்டாயா?" என்று ஒருமையில் திட்டி அவமானப்படுத்திய டிஎஸ்பிதான் என் சாவுக்கு காரணம் என்று லெட்டர் எழுதிவைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர் ஒருவர்.. இவர் திமுக பிரமுகரும்கூட.. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் சிவராம பெருமாள்... 48 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.
அந்த பகுதியில் ஒரு ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார்.. அத்துடன், இவர் திமுக மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளரும் கூட.. இவரது மனைவி பெயர் சீதா... அவரும் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
பேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்
கார்
இந்நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி கொரோனா டியூட்டிக்கு சென்று விட்டு திரும்பிய சீதாவை, சிவராமபெருமாள் தன்னுடைய காரில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.. அப்போது வழியில் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் டிஎஸ்பி பாஸ்கரனும் ஈடுபட்டிருந்தார்.. அங்கு வந்த சிவராம பெருமாளின் காரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
இங்கிலீஷ்
எஸ்பியை பார்த்ததும், காரில் இருந்து இறங்கிய டாக்டர் சிவராமப் பெருமாள், மனைவி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா டியூட்டி முடித்துவிட்டு வந்ததால், வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருப்பதாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார். அதற்கு எஸ்பி, "ஏன் இங்கிலீஷில்தான் பேசுவியா? தமிழில் பேச மாட்டாயா? என்று ஒருமையில் கேள்வி கேட்டுள்ளார்.. மேலும், டிஎஸ்பி பாஸ்கரன், டாக்டரையும், மனைவி சீதாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
அவமானம்
இதை அங்கிருந்தோர் சுற்றி வேடிக்கை பார்த்துள்ளனர்.. அந்த ஊரில் தம்பதி இருவருமே மிகப்பிரபலமான டாக்டர்கள் என்ற நிலையில், இப்படி எல்லார் முன்பும் டிஎஸ்பி பேசியது சிவராம பெருமாளுக்கு ரொம்பவும் அவமானமாக போய்விட்டது.. அப்போதிருந்தே மன வருத்தத்தில் சிவராமன் பெருமாள் இருந்தாலும், பாஸ்கரனும் அவரை விடாமல் மிரட்டியும் சீண்டியும் வந்ததாக சொல்லப்படுகிறது.
லெட்டர்
ஒருகட்டத்தில் இதை பொறுக்க முடியாமல், சிவராமன் பெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார்.. அதற்கு முன்னதாக ஒரு லெட்டரையும் எழுதி வைத்தார்.. அந்த லெட்டரில்,"என்னை மிரட்டியது டிஎஸ்பி பாஸ்கரன் தான்.. அவர்தான் என்னுடைய சாவுக்கு காரணம்" என்று எழுதிவைத்துவிட்டு, விஷத்தையும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரபரப்பு
டாக்டரின் இந்த திடீர் தற்கொலையும், அதற்கு காரணமாக துணை கண்காணிப்பாளர் இருந்ததும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவராம பெருமாளின் உடலையும், கடிதத்தையும் கைப்பற்றி சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.