எதுக்காக இறந்தோம்னு தெரியாமலேயே குழந்தை சுஜித் உசுரை விட்டுருச்சே.. கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.
Recommended Video
கன்னியாகுமரி: "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் 'நீ வந்துடுவே சுஜித்.. உங்க அம்மா, அப்பாக்கு நீ கிடைச்சிடுவேன்னு' சொல்லிட்டே இருந்தேன்.. எதற்காக இறந்தோம் என்று தெரியாமலேயே இறந்துவிட்டான்" என்று காக்கிசட்டை அதிகாரி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சுஜித்தின் பெயரால் ஒரு விருதை ஏற்படுத்தி, உயிர்களை மீட்க முழு மூச்சாக செயல்படுபவர்களுக்கு அதை வழங்குவதே சுஜித்துக்கு நாம் செய்யும் அர்ப்பணிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி. சுஜித் நினைவாக இவர் உருக்கமாக பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்த உயிர் உலகத்துக்கு பிறந்து, வளர்ந்து, 70, 80 ஆண்டுகள் கழித்து முடிந்திருக்க வேண்டிய ஒரு உயிர். எதற்காக இறந்தோம் என்று அறியாமலேயே சென்றுவிட்டான்.
80 மணி நேர போராட்டம்.. கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?.. சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது எப்படி?
பெரிய சோகம்
எனக்கு நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை 2013-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் என்னை விட்டு கண் காணாத இடத்துக்கு சென்றுவிட்டாள். அவளின் நினைவாக 6 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.. உலகத்திலேயே பெரியசோகம், குழந்தை இறந்துபோவதுதான். மற்ற எந்த சோகத்தையும் தாங்கி கொள்ளலாம். நாம் இறந்து, நமக்கு நம் பிள்ளைகள் கொள்ளி வைக்க வேண்டும், இந்து மதப்படியோ, இஸ்லாமிய மதப்படியோ, கிறிஸ்தவ மதப்படியோ!
தொண்டு நிறுவனங்கள்
என் பிள்ளைக்கு நான் கொள்ளி வைத்தேன். அந்த வேதனையை அனுபவித்த ஒரு உணர்வில் இதை பதிவிடுகிறேன். என் மகளின் கல்லறையிலேயே 2 ஆண்டுகள் இருந்தேன். நான் இப்போது யார் மீதும் பழி போடவில்லை. அரசு எந்திரங்களும், பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் அதற்குரிய வேலையை செய்தார்கள்
தீ விபத்து
ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நாம் இதுபோன்ற ஒரு குறையை தெரிந்து கொள்கிறோம். பல நிகழ்வுகளை அடுக்கலாம். கும்பகோணம் பள்ளி தீவிபத்து, பள்ளி வாகனத்தில் ஓட்டையில் விழுந்து குழந்தைகள் இறப்பது என ஒவ்வொரு நிகழ்வுகளின் போது அந்த சமயத்தில் மட்டும் அதைப்பற்றி நினைக்கிறோம். இப்போ நாம ஆழ்துளை கிணறு பற்றி மட்டும் நினைக்கிறோம். என் வேண்டுகோள் என்னவென்றால், மக்களுக்கும், தமிழக அரசுக்கும் நான் வைப்பது இது போன்ற ஒரு சம்பவத்தை நாம் சந்திக்கக்கூடாது. இதற்காக அரசு ஒரு தீர்வு காண வேண்டும்.
விருது
சுர்ஜித் இறந்த ஒன்றிரெண்டு ஆண்டுகளில் நாம் இதை மறந்துவிடுவோம். அவனுடைய அம்மா, அப்பா, அண்ணன் மட்டும் வாழும் காலம் வரை அவனை நினைத்திருப்பார்கள். நாம் மறந்துவிடுவோம். இப்படி ஒரு சம்பவம் உலகில் எங்குமே நடக்ககூடாது என்பதற்காக என்னுடைய சிறு யோசனை.. இந்த செல்ல பிள்ளையின் சுஜித்தின் பெயரால் ஒரு விருதை தமிழக அரசு ஏற்படுத்தி, இதுபோன்ற சம்பவங்களில் உயிர்களை மீட்க முழு மூச்சாக செயல்படுபவர்களுக்கு விருது வழங்க வேண்டும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதுதான் சுஜித்துக்கு நாம் செய்யும் அர்ப்பணிப்பு.
நீ வந்துடுவே சுஜித்
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனாலும் நான்கூட நேற்று கடவுளை வேண்டவில்லை.. ஆனால் மனதிற்குள் "நீ வந்துடுவே சுஜித்.. உங்க அம்மா, அப்பாக்கு நீ கிடைச்சிடுவேன்னு" சொல்லிக்கிட்ட இருந்தேன். பிள்ளைகள் பிறந்து, அது இறந்த பிறகு பெற்றோர் படும் பாடு எனக்கு தெரியும். சுஜித்தின் நினைவுகள் இத்தோடு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவை போடுகிறேன். இவன் உயிர் காலங்காலமாக இருக்க வேண்டும். இன்னும் பல உயிர்களை காப்பாற்ற இவன் ஒரு காரணமாக இருக்க வேண்டும்.
போஸ்ட் மார்ட்டங்கள்
எத்தனையோ விபத்துகள், கொலைகளையும், அடிதடிகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். எத்தனையோ போஸ்ட்மார்ட்டங்களை பார்த்திருக்கிறேன். அவற்றை பணியாக செய்திருக்கிறேன். ஆனால் என் மகளின் மரணத்திற்கு பிறகு இந்த சம்பவம் என் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. என் மகளின் கல்லறையில் "உன்னுடன் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே" இதைதான் எழுதி வைத்திருக்கிறேன். கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரி அது.
அர்ப்பணிப்பு
அதைதான் நினைத்து கொண்டிருக்கிறேன். சுஜித்துக்கு தமிழக அரசும் மக்களும் ஏதாவது செய்ய வேண்டும். நேரத்தி சிலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமன்டி நடராஜன், எம்.பி. ஜோதிமணி ஆகியோரின் அர்ப்பணிப்பை கண்டு டிவியில் பார்த்து வியந்துபோனேன். அமைச்சர் விஜயபாஸ்கர் சார்.. எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய அர்ப்பணிப்பு அரசியல்வாதியையும் தாண்டி தகப்பன் ஸ்தானத்தில் இருந்து செயல்பட்டார். அப்படி ஒரு உணர்வு எல்லோருக்குமே வர வேண்டும்" என்றார்