கொரோனா வைரஸின் காதலி பெயர் என்ன.. தெரியலையா.. போடு 10 தோப்பு கரணம்.. அதிர வைக்கும் குமரி போலீஸ்
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றியவர்களுக்கு விழிப்புணர்வு தேர்வை நடத்தி அதன் மூலம் போலீஸார் தண்டனை கொடுத்து வருகிறார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
மாநிலங்கள்
பெரும்பாலான இடங்களில் இது போல் ஊரடங்கை மீறுவோருக்கு பல்வேறு தண்டனை கொடுக்கப்படுகின்றன. அதில் தோப்புக் கரணம் போடுவது, நாற்காலியில் உட்காருவது போல் உட்காருவது, சோஷியல் டிஸ்டன்சிங் உள்ளிட்டவற்றை தண்டனைகளாக வழங்கி வருகிறார்கள். இன்னும் சில மாநிலங்களில் தடியடி நடத்தி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
நூதன தண்டனை
இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையிலான போலீஸார் தமிழக கேரள எல்லைப் பகுதிகளான களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் சாலையில் தேவையின்றி சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள். போலீஸார் அவர்களுக்கு நூதன தண்டனையை கொடுத்து வருகிறார்கள்.
10 கேள்விகள்
அதாவது விழிப்புணர்வு தேர்வு நடத்தி அதன் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது. அதில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது, கொரோனை வைரஸின் காதலியின் பெயர் என்ன, கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி என்ன, சமூக விலகல் என்றால் என்ன என 10 கேள்விகளை உள்ளிட்ட வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன.
தண்டனை
அதை விதிகளை மீறுவோர் தனித்தனியாக அமர வைத்து தேர்வு நடத்தப்படுகிறது. அந்த கேள்விகளுக்கு தவறான பதில் எழுதிய ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 தோப்புக் கரணம் போடுவதோடு கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தனர். மேலும் 10 கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லி கொடுத்து 144 தடை உத்தரவை மீறினால் அதற்கான தண்டனை குறித்த விவரங்களும் விளக்கப்படுகிறது.