சுனாமிக்கு முன் நடந்த அதே சம்பவம்.. கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்..பரபரப்பு
கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திடீரென நேற்று முன்தினம் மாலை கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் 2004ம் ஆணடு சுனாமி ஏற்படும் முன்பும் கடல் அதேபோன்று உள்வாங்கி ஆழிப்பேரலை வீசியது. எனவே தான் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆனால் கடல் அடுத்த நாள் இயல்பு நிலைக்கு மாறியது. ஆனால் நேற்று மாலை மீண்டும் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி தான் இந்தியாவின் தொடங்க முனை. உலக புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஆகும்.
முக்கடலும் சங்கமிப்பதால் ஆவேசத்துடன் வீசும் கடல் அலைகள் கொண்ட பகுதியாகும். விவேகாந்தர் பாறை, திருவள்ளூர் சிலையும் கம்பீரமாக வீற்றிருக்கும் இடமாகும்.
அதிமுகவில் வழிகாட்டு குழுவை ஒபிஎஸ் விரும்புவது ஏன்? திகைப்பில் இபிஎஸ்.. பரபர பின்னணி
உள்வாங்கிய கடல்
இந்நிலையில் கன்னியாகுமரில் கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர் என்று உள்வாங்கியது. இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்தது. விடிந்த பிறகுதான் கடல் இயல்பு நிலைக்கு வந்தது. வழக்கமாக கடல் உள்வாங்குவதும் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதும் சகஜம் என்றாலும், பெரிய அளவில் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு வந்ததால் அச்சம் ஏற்பட்டது.
50 அடி தூரம் உள்வாங்கல்
இதனிடையே நேற்று பகல் முழுவதும் கடல் இயல்பாக காணப்பட்டது. ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு கடல் 2-வது நாளாக மீண்டும் உள்வாங்கியது.. நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்ளே சென்றது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த ராட்சத பாறைகள், மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிந்தன.அத்துடன் கடலுக்குள் இருந்த விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகள் திடல் போல் காணப்பட்டது. . இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்தனர். விடியவிடிய இந்த நிலையே நீடித்தது.
மீனவர்கள் அச்சம்
மீனவர்களின் அச்சத்திற்கு காரணம் என்னவென்றால் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் கன்னியாகுமரி கடல் இதேபோன்று தான் உள்வாங்கியது. அதன் பின்ன ஆழிப்பேரலை வீசி ஆட்களை இழுத்துச்சென்றது. இதனால் கடற்கரையோர மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனால், அவர்கள் இரவு முழுவதும் அச்சத்துடனே இருந்தனர். கடல் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு வருவதாகவும் இருப்பது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்கள் வியப்பு
மீனவர்கள் இந்த விஷயத்தை அச்சத்துடன் ஆச்சயர்த்துடனும் பார்க்கிறார்கள். வழக்கமாக பகல் நேரத்தில் கடல் உள்வாங்கும். ஆனால் இரவு நேரங்களில் கடல் உள்வாங்கியதை இப்போதுதான் பார்க்கிறார்கள். தொடர்ந்து 2 நாட்களாக இரவு நேரங்களில் கடல் உள்வாங்கி இருப்பது மீனவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம் என்று ஜோதிட ரீதியாக சிலர் காரணங்களை முன்வைக்கிறார்கள். எனினும் சிலர் இதை பற்றி கூறும் போது, கடல் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயற்கையான நிகழ்வு என்றும், இதை பார்த்து அச்சப்பட தேவையில்லை என்றும் எனவே கன்னியாகுமரி கடல் விவகாரத்தில் பீதியை பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர்.