மெரினாவில் வைத்து சீர்காழி கொள்ளையர்கள் கைகளை துண்டு துண்டாக வெட்டணும்.. குமரி இளைஞரின் வன்ம பேச்சு
கன்னியாகுமரி: சீர்காழியில் தாய் மகனை கொன்று கொள்ளையடித்த கொள்ளையர்களை மெரினா கடற்கரைக்கு கொண்டு சென்று கைகளை துண்டு துண்டாக வெட்டி கம்பியில் தொங்கவிட்டு கொல்ல வேண்டும் என பேசிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
சீர்காழி பகுதியில் தன்ராஜ் எனும் நகைக் கடை அதிபர் வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் தாய், மகனின் கழுத்தை அறுத்து கொன்று அங்கிருந்த 17 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் போலீஸார் இந்த கொள்ளை சதி திட்டம் தீட்டியவர் உள்பட 4 பேரை கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பியோட முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைரல்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்தவர் நிர்மல். இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். மிகவும் கொடூரமாக பேசும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெரினா
அந்த வீடியோவில் கத்தி, தென்னை மட்டையுடன் நிர்மல் இருக்கிறார். அவர் சீர்காழியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன் தாய், மகனை கொன்றவர்களை மெரினாவுக்கு இழுத்து வர வேண்டும். அங்கு அனைத்து மக்களையும் கூட்டி கொள்ளையர்களின் இரண்டு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி 10 அடியில் கம்பை நட்டு தொங்கவிட வேண்டும்.
தென்னை மட்டை
அப்போது மற்ற கொள்ளையர்கள் பயப்படுவார்கள் என்று கூறி அந்த கத்தியால் தென்னை மட்டையை வெட்டி காட்டுகிறார். மனிதாபிமான அடிப்படையில் தண்டனையை குறைப்பதால் தமிழகத்தில் திருடர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே முதல்வர் எனது பாணியை கடைப்பிடிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளார் நிர்மல்.
வன்ம வீடியோ
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கைகளை வெட்டுவது எப்படி என்ற விளக்கத்துடன் மிகவும் வன்மமான வகையில் வீடியோ வெளியிட்ட நிர்மல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டத்தின் ஆளாளுக்கு கையில் எடுத்துக் கொண்டால் போலீஸ், நீதித் துறை எதற்கு என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.