ஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஓமன் நாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து உடலை சொந்த ஊருக்கு விரைந்து அனுப்பி வைக்க உறவினர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் அருகே குறக்குடி பகுதியை சேர்ந்த ரெங்கபாய் மகன் பாபு. ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் நான்கு ஆண்டுகளாக ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந் நிலையில் கடந்த வாரத்தில் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து தாயிடம் தான் ஒரு மாதத்தில் வீட்டிற்கு வர உள்ளதாகவும் சம்பள பணத்திற்காக காத்திருப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மற்றொரு நபரான அருள் என்பவர் பாபுவின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது மகனை அடித்து கொலை செய்து பாழடைந்த வீட்டில் சடலத்தை தொங்கவிட்டுள்ளனர் என்றும் போலீசார் உடலை மீட்டு சலாலா மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சோகத்தில் காணப்படும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்து உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.