கை, கால்களை கட்டியபடி.. ஒரு நீச்சல் சாதனை.. கடலில்.. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு!
Recommended Video
கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடலில் கேரளாவை சேர்ந்த நீச்சல் வீரர் கை மற்றும் கால்களை கட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையுள்ள 1 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சலடித்து கடந்து சாதனை படைத்தார்.
சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த நாள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளை தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடினர்.
இந்த நாளில் இளைஞர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நீச்சல் வீரரும் கேரளா அரசின் சுற்றுலா வழிகாட்டியுமான ரதீஸ்(33) என்பவர் கடலில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நீச்சலிடித்து சென்று சாதனை படைத்தார்.
இவரது சாதனையை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் பாரட்டினார்கள். இவர் இந்த ஆண்டு லண்டன் ஆங்கில கால்வாயில் 34 கிலோமீட்டர் கை, கால்களை கட்டி கொண்டு நீச்சலடிக்க உள்ளதாகவும் அதன் முன்னோட்டமாக தான் கன்னியாகுமரி கடலில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.