என் வீட்ல கல் எறிஞ்சாங்க.. பதறி போய் ஸ்டாலினிடம் சொல்ல போனேன்.. ஆனா எறிய சொன்னதே அவர்தானாம்.. குஷ்பு
கன்னியாகுமரி: நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் தொண்டர்களை வைத்து கல் எறிய சொன்னதே ஸ்டாலின்தான் என பொங்கல் விழாவில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் கன்னியாகுமரியில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.
விவசாய சட்டம்- தென்னிந்தியாவில் பிரச்சனை இல்லை என்ற அட்டர்னி ஜெனரலுக்கு எதிராக சீறிய திமுக வில்சன்
குடும்ப அரசியல்
அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸில் குடும்ப அரசியல் உள்ளது. இவர்களும் செயல்படமாட்டார்கள், மற்றவர்களையும் செயல்பட விட மாட்டார்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகையை நாம் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறோம். முஸ்லீம் பெண்ணான நான் பொட்டு வைத்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
தைரியம் இருக்கா
மதம் பெரியது கிடையாது. ஆனால் ஒரு மதத்திற்கு எதிராக பேசுவது மிகவும் தவறு. திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராகப் பேசுகிறார். நான் அவருக்குச் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் முஸ்லீம் மதத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்து பார்க்கச் சொல்லுங்கள்.
பாஜக எதிரானது அல்ல
பாஜக சிறுபான்மை மதத்திற்கு எதிரானது அல்ல. 2019-இல் பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களித்தனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறிந்தனர். பதறிப் போய் ஸ்டாலினை பார்க்கப் போனேன். அவரை பார்க்க முடியவில்லை.
கல் வீச சொன்னதே ஸ்டாலின்தான்
ஆனால் கல் வீச சொன்னதே ஸ்டாலின்தான் என்று பிறகுதான் தெரியவந்தது. நான் பாஜகவுக்கு வந்துவிட்டதால் பாதுகாப்பாக இருக்கிறேன் என்றார் குஷ்பு. திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு சென்ற குஷ்பு இது குறித்து இத்தனை ஆண்டுகளாக வாய்த் திறக்காமல் பாஜகவுக்கு சென்றவுடன் ஸ்டாலின் மீது குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.