ஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசை... பள்ளி மாணவர்கள் சந்தோஷம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால்விளையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில், மாணவ, மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின் விசிறிகள், குடிநீர் பாட்டில்கள், பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பள்ளிக்கு கல்வி சீர் வரிசையாக வழங்கினார்கள்.
முன்னதாக, அனைத்து சீர் வரிசை பொருட்களும் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேளம், தாளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து, அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக நிகழ்ச்சியின் போது பெற்றோர் தெரிவித்தனர்.