எல்லாம் மேல இருக்கிற அய்யப்பன் பாத்துக்குவான்… சபரிமலை விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபி கருத்து
கன்னியாகுமரி: சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை அய்யப்பனே தண்டிப்பார் என்று பிரபல மலையாள நடிகரும், பாஜக ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பதற்கு ராஜ்யசபா எம்பியும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதன் படி உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதனுடைய திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி செய்தியாளர்களிடம் கூறும்போது, 'சபரிமலை விஷயத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை. வரும் 22ம் தேதி நீதிமன்றம் கருத்து கூறிய பிறகே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது சரிதானா என்பதனை மக்கள் தான் முடிவு செய்யட்டும். இந்த அரசிற்கு வாக்களித்தது தவறு என்று கேரளா மக்கள் நினைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணம் ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை.
கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து சத்தம் போட்டு ஆண்டவனையும் மதிக்காமல் ஆச்சாரங்களையும் மதிக்காமல் உள்ளனர். இது நாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை அய்யப்பன் தண்டிப்பார்.
கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க அய்யப்பன் திட்டம் போடுவார் என்ற நம்பிக்கை தன்னிடம் அதிகமாக உள்ளது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் அருகே 3 லட்சம் ரூபாய் செலவில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.