பெண்களின் சபரிமலை..மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கலசாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கலசாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் தமிழக, கேரள மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடிகட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மாசி கொடைவிழா வெகு விமர்சையாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி கொடைவிழா வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதற்கிடையே பல மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிகள் தொடங்கியது.
பெண்களின் சபரிமலை..மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கலசாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள் | Mondaicaud Bhagavathi Temple pic.twitter.com/3tvd0R5Gpr
— Oneindia Tamil (@thatsTamil) February 10, 2019
சுமார் 3 கோடி ருபாய் மதிப்பீட்டில் கோவில் கோபுரம் ,கொடிமரம், கருவறை மேற்கூரை மற்றும் சுற்றுசுவர் ஆகிய பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை இந்து அறநிலையத் துறை சார்பில் கலசாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக நான்காம் கால யாகசலை பூஜை, துவார பூஜை, தோரண பூஜை, வேதிகா அர்ச்சனை, ராக மாலிகா என பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன. விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.