அமைச்சர் மனோ தங்கராஜ் மகனுக்கு திமுகவில் முக்கியப் பதவி! ஐடி வேலை டூ அரசியல்வாதி அவதாரம்!
கன்னியாகுமரி: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் ரிமோனுக்கு திமுகவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் அமைச்சராவதற்கு முன்பு வரை அரசியல் வாசமே இல்லாமல் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரிமோன், இப்போது பக்கா அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே மாவட்டத்தில் அமைச்சர் மகனும் தலைமை செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைமையிடம் உருகிய மூத்த மாவட்டச் செயலாளர்! காத்திருந்து காத்திருந்து கடுப்பான மாஜி எம்.எல்.ஏ!
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திமுகவை பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக மேற்கு -கிழக்கு என்று 2 அமைப்புகளாக உள்ளது. அதில் மேற்கு மாவட்ட திமுகச் செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ் மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் தனது மகன் ரிமோனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இது அந்த மாவட்டத்தில் உள்ள திமுக சீனியர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பலரும் போட்டி
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவிக்காக பலரும் அமைச்சர் மனோ தங்கராஜிடம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனிடையே இதில் குறிப்பிட வேண்டிய விவரம் என்னவென்றால், மனோ தங்கராஜ் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார் அவரது மகன் ரிமோன். தந்தை அமைச்சரானதும் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல்வாதி அவதாரம் எடுத்தார்.
பக்கா அரசியல்வாதி
கடந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே அரசியலின் ஆழத்தை தந்தை மனோ தங்கராஜிடம் கற்றுக்கொண்ட ரிமோன் இப்போது பக்கா அரசியல்வாதி என்ற பெயரை எடுத்திருக்கிறார். தந்தை ஊரில் இல்லாத தருணங்களில் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டு நல்லது கெட்டது என அனைத்து நிகழ்வுகளிலும் ஆஜராகிவிடுகிறார் ரிமோன். அதேபோல் அரசு அதிகாரிகளிடமும் திரைமறைவில் வேலை வாங்குவதில் கெட்டிக்காரராக உள்ளார்.
தலைமை செயற்குழு
திமுகவின் அனைத்து மேல்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் தருணங்களில் தலைமை செயற்குழு உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களை காட்டிலும் செயற்குழு உறுப்பினர்களுக்கு ஒரு படி மேலாகவே முக்கியத்துவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.