அப்பா எங்கே.. எப்போ வருவாரு.. கதறும் வில்சனின் மகள்.. சமாதானம் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்!
வில்சனின் மகளுக்கு யாராலுமே சமாதானம் செய்ய முடியவில்லை
கன்னியாகுமரி: "அப்பா எங்கே.. எப்போ வருவாரு" என்று கதறியபடியே அழுது கொண்டிருக்கிறார் எஸ்ஐ வில்சனின் மகள்.. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவரை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீருடன் போராடி கொண்டிருக்கிறார்கள்!
2 தினங்களுக்கு முன்பு களியக்காவிளை செக்போஸ்ட்டில் 2 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் எஸ்ஐ வில்சன்.. கொன்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.. யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று இப்போது வரை தெரியவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகள், பெங்களுரூவில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் இருந்த குண்டுகளுடன் ஒத்து போவதாக போலீசார் தெரிவித்திருந்தனர்... அதனால் எஸ்ஐ கொலையில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பரிதவிப்பு
இதனிடையே வில்சனின் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது.. வில்சனின் மரணம் குறித்து அவரது மனைவி மேரி சொல்லும்போது, "எங்களைவிட இந்த போலீஸ் டிப்பார்ட்மென்ட்டை அவருக்கு ரொம்ப பிடிக்கும்..என் சின்ன பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை... ரிடையர் ஆனதும் அவளை பக்கத்துலயே இருந்து நல்லா பாத்துக்கணும்ன்னு சொல்லிட்டே இருப்பார்.. அந்த பொண்ணை எப்படி நான் கரை சேர்ப்பேன்..." என்று கண்ணீர் விடுகிறார்.
2 பெண்கள்
அமைதியான வாழ்க்கையை வில்சன் வாழ்ந்து வந்துள்ளார்.. இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள்.. மூத்த மகளுக்கு கல்யாணமாகி குழந்தை உள்ளது.. 2 வது மகள் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவராம்.. 26 வயதாகிறது.. இவர் மீதுதான் வில்சனுக்கு ரொம்ப பாசமாம்.. தூத்துக்குடியில் வேலை பார்த்து வந்த வில்சன், இந்த மகளின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்தாராம்.
2-வது மகள்
குழித்துறையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பள்ளியில் மகளை சேர்த்தார் வில்சன்.. எப்போதெல்லாம் டியூட்டி முடிகிறதோ, உடனே மகளைதான் ஓடிவந்து பார்ப்பார்.. வில்சன் சாப்பாடு ஊட்டி விட்டால்தான் இவர் சாப்பிடுவாராம்.. சடலமாக வில்சனை அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தபோதுகூட, அப்பா எங்கே என்று கேட்டு அழுதபடியே வீட்டிற்குள் சுற்றி சுற்றி வந்துள்ளார்.
அப்பா எங்கே
வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வருபவர்களிடமும் அப்பா எங்கே என்று கேட்டபடியே உள்ளார்.. டிஜிபி திரிபாதி அஞ்சலி செலுத்த போகும்போது, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி உள்ளார்.. அப்போதும் அப்பா எப்போ வருவாரு, அப்பா எங்கே என்றே இந்த பெண் கேட்டுள்ளார்.. இவரை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் கலங்கி உள்ளனர் குடும்பத்தினர்.. இப்போதும் அவர் தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார் "அப்பா எங்கே"!