கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் பெயரில் விருப்ப மனு… ஓரிரு நாட்களில் காங்.,வேட்பாளர் பட்டியல்
கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுவை மார்ச் 19 ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம்.
இதனிடையே, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று அவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் பெயரில் விருப்ப மனு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் காங்கிரஸ் தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர் .
போட்டி எங்கே?
இதற்கிடையே, ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.
உத்தேச பட்டியல்
தற்போது, தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்த உத்தேச பட்டியல் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, கன்னியாகுமரியில் வேட்பாளராக களம் இறங்க ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ். ராபர்ட் புரூஸ், வின்சென்ட் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடும் போட்டி
விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், தேனியில் ஜே.எம்.ஆரூண், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதிமணி, ஆரணியில் கிருஷ்ணசாமி அல்லது முருகானந்தம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்பி விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை, ராணி ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல்
இருப்பினும் காங்கிரஸ் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்ட பின்பு, கட்சி தலைமை போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.