இந்த தேர்தலோடு தி.மு.க.வின் சரித்திரத்துக்கு முடிவுரை எழுதுவோம்... பொங்கி எழும் பொன்.ராதாகிருஷ்ணன்!
கன்னியாகுமரி: இந்த தேர்தலோடு திமுகவின் சரித்திரத்துக்கு முடிவுரை எழுதப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1969-ம் ஆண்டு காமராஜருக்கு என்ன துரோகம் காங்கிரஸ் செய்ததோ அதை இந்த தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது என்றும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்கான பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. முன்பு இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்தவர் இந்திரா காந்தி. எனவே சோனியா காந்தி அவரை பார்த்து கேட்க வேண்டும். பிரதமர் மோடியின் தேசபக்தி, நெஞ்சுறுதியை மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டிற்கு ஆதரவாக கருத்து கூறுவதாக இருந்தாலும் சரி, செயல்படுவதாக இருந்தாலும் சரி பிரதமர் மோடிக்கு நிகர் யாரும் இல்லை.
திமுக ஒரு காலத்தில் அடைந்தால் திராவிட நாடு என்று கூறியது. அது இதுவரை அடைய முடிய வில்லை, இன்று விடிந்தால் அடையும் என்கிறார்கள். எப்படி அன்று திராவிட நாடு அடைய வில்லையோ அது போல் இனிமேல் திமுகவுக்கு விடியலே இல்லை. திமுகவின் சரித்திரத்துக்கு இந்த தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்.
தமிழகத்தில் இரட்டை காளைகளான திமுகவும், காங்கிரசும் இந்த தேர்தலோடு வெளியேறும் நேரம் வந்து விட்டது. 1969-ம் ஆண்டு காமராஜருக்கு என்ன துரோகம் காங்கிரஸ் செய்ததோ அதை இந்த தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.