கடும் விமர்சனங்களால் தர்மசங்கடத்தில் குஷ்பு.. ஆதரவு கரம் நீட்டிய பொன் ராதாகிருஷ்ணன்!
கன்னியாகுமரி: குஷ்பு தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவின் கமலாலயத்தில் சொன்ன போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பிரதமர் மோடியை, கடுமையாக விமர்சித்தவர் என்றும் சிலர் குஷ்புவை விமர்சித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்புவிற்கு பொ.ராதாகிருஷ்ணன் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நாள் முதலே சர்ச்சைகள் தொடர்கின்றன. முதலில் அவரது கணவர் சுந்தர் சி பேச்சை கேட்டுத்தான் பாஜகவில் குஷ்பு இணைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதை குஷ்பு திட்டவட்டமாக மறுத்தார்.
இன்னொரு புறம் குஷ்பு முன்பு பாஜகவை, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வெளியிட்ட பல்வேறு கருத்துக்களின் வீடியோக்கள் மற்றும் ட்வீட்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு குஷ்புவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினர், ஆனால் அதற்கும் அவர் சமாளிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் பதில்அளித்தார்.
முதல்நாள் ஷாக்.. 2ம் நாள் சர்ச்சை.. 3ம் நாளில் போலீஸ் ஸ்டேஷன்.. குஷ்பு மீது பாயும் சரமாரி புகார்கள்!
குஷ்பு அதிரடி பேட்டி
இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜகவின் மாநில அலுவலகமாக கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய குஷ்பு, நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான். பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார். நானும் அவரைப்போல் குரல் கொடுப்பேன் என்றார். இதை வைத்து பாஜகவினர் சிலர் குஷ்புவை விமர்சித்தனர். ஆனாலும் பாஜக மூத்த தலைவர்கள் குஷ்புக்கு ஆதரவாக உள்ளனர்.
இணைத்ததில் தவறில்லை
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திரிபதி கூறுகையில், குஷ்பு 'பெரியாரிஸ்ட்' என்று சொன்னதற்காக நான் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கென்று ஒரு கொள்கை உள்ளது. சித்தாந்தம் உள்ளது. மற்ற கொள்கைகள் எங்களுக்கு தேவையில்லை. ஈ.வெ.ராவை கேவலமாக பேசிய இருவர் அண்ணாதுரை அவர்களும், கருணாநிதி அவர்களும் தான். அவர்களை கேளுங்கள். நாங்கள் யாரையும் தனிப்பட்ட தாக்குதல் செய்வதில்லை. குஷ்பு தான் (மோடியை) அப்படி பேசியது தவறு என்று உணர்ந்துவிட்டேன் என்று கூறிய பின்னர், கட்சியில் இணைத்து கொண்டதில் தவறில்லை என்று ஆதரவு தெரிவித்தார்.
குஷ்புவுக்கு ஆதரவு
குமரி மாவட்டம் தக்கலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரும் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், சகோதரி குஷ்பு பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அவர் அரசியலில் சாதாரண ஒரு ஆளைப் போல் இல்லாமல் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். 2013-14 லேயே பா.ஜவில் இணைய வேண்டியவர். மோடியை அவர் விமர்சனம் செய்தது சில சூழ்நிலைகளாலும் அழுத்தத்தினாலும் தான் என்று அவரே தெரிவித்திருக்கிறார்" என்றார்.
மூளை வளர்ச்சியில்லாதவர்கள்
இதனிடையே நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் என்று கூறியிருந்தார், இதற்கு மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நடிகை குஷ்பு அவசரத்தில் தவறுதலாக வார்ததை வந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.