"எதுக்கு வந்திருக்கீங்க.. வர மாட்டேன்" காலையில் வீடுதேடி வந்த போலீஸ்.. வாதம் புரிந்த நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் முயன்றனர்
கன்னியாகுமரி: "நான் வர மாட்டேன்.. எதுக்கு வந்திருக்கீங்க.. எந்த அடிப்படையில் என்னை கைது செய்ய வந்திருக்கீங்க" என்று தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் நாஞ்சில் சம்பத் வாக்குவாதம் செய்துள்ளார்!!
கடந்த எம்பி தேர்தலின்போது புதுச்சேரியில் பிரச்சாரத்துக்கு போனார்.. முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நெல்லிக்குப்பம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.. அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது.
இதையடுத்து, நாஞ்சில் சம்பத் மீது தவளைக்குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, 3 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஆனால் இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நேரில் ஆஜராகவே இல்லை.
நாஞ்சில் சம்பத்
இந்நிலையில், நேரில் ஆஜராக வேண்டும் என்று நாஞ்சில் சம்பத்துக்கு கடந்த 17-ம் தேதி சம்மனும் அனுப்பப்பட்டது.. இவ்வழக்கில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் துரிதமாயினர்.. அதன்படி குமரி மாவட்டம் மணலிகரையில் உள்ள அவரது வீட்டிற்கு 4 போலீசார் இன்று காலையிலேயே சென்றுவிட்டனர்.
திட்டமிட்ட சதி
அப்போது நாஞ்சில் சம்பத் போலீசாரிடம், வரும் 21-ம் தேதி ஆஜராக சம்மன் வந்துள்ளதே.. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே கைது செய்ய முயற்சி செய்வதா? எந்த அடிப்படையில் என்னை கைது செய்ய வந்தீங்க? முன்கூட்டியை கைது செய்ய வந்துள்ளது திட்டமிட்ட சதி" என்று தெரிவித்து வாக்குவாதம் செய்தார்..
இதனிடையே, நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி என்று தகவல் பரவியதும், ஏராளமான திமுகவினர் நாஞ்சில் சம்பத்தின் வீட்டு முன்பு கூடிவிட்டனர்.
சம்மன்
அப்போது அவர்களிடம் நாஞ்சில் சம்பத் சொல்லும்போது, "எனக்கு அனுப்பபட்ட சம்மனில் ஆஜராக 23-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அப்படி இன்னும் அவகாசம் இருக்கும் போது எதற்காக இன்று என்னை கைது செய்ய வர வேண்டும். நான் 23- ஆம் தேதி வரை ஆஜராகமல் இருந்தால் என்னைக் கைது செய்ய வந்திருக்கலாம்" என்றார்.
காவல்துறை
நான் தொடர்ச்சியாக திராவிட இயக்க சொற்பொழிவாளனாக பலரின் முகத்திரையை கிழித்து வருகிறேன்.. அதனால்தான் இப்படி நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்... இது திட்டமிட்ட சதி. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது... இது சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட சம்மட்டி... கைது ஆக வேண்டுமா வேண்டாமா எனக் குழப்பமாக உள்ளது... அதனால் இதுசம்பந்தமாக சட்ட வல்லுநர்களைச் சந்தித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன்" என்றார்.
கிளம்பி சென்றார்
இதனிடையே குமரி மாவட்ட போலீசாரும் அங்கு வந்தனர்... குமரி மாவட்டத்துக்கு இப்படி கைது செய்ய வருவதாக அவர்களுக்கு புதுச்சேரி போலீசார் தகவல் அளிக்கவில்லை என்று தெரிகிறது.. இதனால் குமரி மாவட்ட போலீசார் எந்த ஒத்துழைப்பும் அவர்களுக்கு கொடுக்கவில்லை. சிறிது நேரம் நாஞ்சில் சம்பத் வீட்டு முன்னே நின்று கொண்டிருந்த போலீசார் இதோ வருகிறோம் என்று வருவதாகக் கூறி கிளம்பி சென்றனர்.. பிறகு நாஞ்சில் சம்பத்தும் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார்.