அரபி கடலில் புயல் சின்னம்.. 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி.. குமரி கடலோரத்துக்கு எச்சரிக்கை!
பலத்த சூறாவளி காற்று காரணமாக குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
Recommended Video
குமரி: அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாகிறதாம்.. இதனால் குமரியில் 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி காற்று சுழட்டி சுழட்டி அடிக்க போகிறதாம்.. வானிலை ஆய்வு மையம் இவ்வாறு எச்சரித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே அரபிக்கடல், வங்கக்கடலில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் தொடர்ந்து நிலவி வருகிறது என்றும் இயக்குனர் சொன்னார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை முதல் அதி தீவிர கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிக்கையும் வெளியிட்டிருந்தது.
தற்போது, கிழக்கு மத்திய அரபி கடற்பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்கிறார்கள்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ!
அதாவது, குமரி கடல், மாலத்தீவு மற்றும் வட இலங்கை கடற்பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால், இன்றும்கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
சின்ன முட்டம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டினம் உள்ளிட்ட மீன் பிடி துறைமுகங்களில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசை படகுகள் கரை ஒதுக்கப்பட்டு உள்ளன. இதே போன்று மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் உள்ள நாட்டு படகுகளும் கரை ஒதுக்கபட்டு உள்ளன.