வடகிழக்கு பருவமழை.. குமரி, மதுரை மாவட்டங்களில் நல்ல மழை.. டெல்டா மாவட்டங்களில் எப்போது?
குமரி: வடகிழக்கு பருவமழையால் குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த மழை அக்டோபர் மாதமே தொடங்க வேண்டியது.
எனினும் சாதகமான சூழல் நிலவாததால் மழை தாமதமானது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, தருமபுரி, மதுரை ஒத்தக்கடை, மேலூர், அழகர் கோவில் ஆகிய பகுதிகளிலும் மழை நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 750 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. 2 நாட்களுக்கு பிறகு நாட்டு படகு மீனவர்கள் சென்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.