சவுதியில் பிறை தெரிந்ததால் இன்று ரமலான்.. குமரியிலும் சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாட்டம்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தவ்ஹித் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை சவுதி உள்ளிட்ட நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததால் தொடர்ந்து குமரியிலும் இன்று கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள பாவா காசிம் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இன்று கொண்டாடப்பட்ட இந்த விழாவில் பெண்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.