பூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இயங்கி வருகிறது இந்தியன் ஓவர்சியஸ் வங்கியின் ஏ.டி.எம் சேவை மையம் இந்த ஏ.டி.எம் மையத்தின் மூலம் மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மணலிக்கரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒரிரு வாரங்களிலேயே இந்த ஏ.டி.எம் சேவை மையம் பூட்டப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாகவே செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பல கிலோ மீட்டர் பயணித்து தக்கலை, அழகியமண்டபம் பகுதிக்கு சென்று பணம் எடுக்கும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்
ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால் இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரினர். பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் சார்பில் இந்தியன் ஓவர்சியஸ் வங்கி கிளை மேலாளருக்கு பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்தியன் ஓவர்சியஸ் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துள்ளது.