125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்
Recommended Video
குமரி: கன்னியாகுமரியில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் தேசியக்கொடி கம்பம்,தேசியக்கொடி மற்றும் 24 மணிநேரமும் ஒளிரும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணிக்கு எம்பி விஜயகுமார் அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவின் தென் எல்லைப் பகுதி என்பதை அடையாளப்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் எம்.பி.யின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து இக்கொடிக்கம்பம் அமைய உள்ளது.
முன்னதாக இக்கொடி கம்பம் அமைக்க மாவட்ட கலெக்டர் பிரசாந் மு.வடநேரே உத்தரவின் பேரில் காந்தி மண்டபத்தின் எதிரேயுள்ள முக்கோணப் பூங்கா மற்றும் பழைய பஸ்நிலைய சந்திப்பு ஆகிய இடங்களை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியாக தங்க நாற்கரச்சாலை முடிவடையும் ஜீரோ பாயிண்டில் இக்கொடிக்கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சர்வதேச தரத்தில் கன்னியாகுமரியை உயர்த்தவேண்டும் என்று கோடிக்கணக்கில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்
இந்நிலையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கரச்சாலை முடிவடையும் ஜீரோ பாயிண்டில் முக்கிய தலைநகரங்களில் பறக்க விடப்பட்டிருக்கும் தேசிய கொடியை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியிலும், தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
இதனையடுத்து ரூபாய் 50 லட்சம் செலவில் 125 உயர கொடிக்கம்பத்துடன் கூடிய பெரிய அளவிலான தேசியக்கொடி மற்றும் அதனைச்சுற்றி 24 மணிநேரமும் ஒளிரும் வகையில் அலங்கார மின்விளக்குகள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான அடிக்கல்லை மேல்சபை எம்பி விஜயகுமார் நாட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரையை உலக அதிசயங்களின் 8-வது அதிசயமாக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறேன் என்றார்.