கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் வீசும் பலத்த காற்றோடு சீறி எழும் அலைகளால் கடலோர கிராமங்கள் பாதிப்படையும். இதனால் மீனவ மக்கள் வீடுகளில் அச்சத்தோடு வசிக்கும் சூழல் எழுகிறது.
இன்று மேற்கு கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் ஏற்பட்டு தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புச் சுவரை தாண்டி தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, அழிக்கால், குளச்சல், கடியபட்டணம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்தது.
ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
பாதிப்பு
மேலும் தென்னந்தோப்புகளிலும் புகுந்து தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்று கடல் சீற்றம் ஏற்படுவதும் கடல்நீர் ஊருக்குள் புகுந்து மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
கடல் அலைகள்
ராட்சத அலைகள் எழும்போதெல்லாம் மீனவர்கள் அரசிற்கு தீர்வு கேட்டு கோரிக்கை முன் வைத்தாலும் நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது. அழிக்கால் மீனவ கிராமத்தில் எழுந்த ராட்சத அலைகளால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் பாதிக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஏராளமான கற்களை கடல்அலை கடலுக்குள் இழுத்து சென்றது.
கடலுக்குள் செல்லவில்லை
இதனால், அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் பீதியடைந்துள்ளனர். கடல் சீற்றத்தோடு காணப்படுவதாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாலும் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை.
மாற்று ஏற்பாடுகள்
பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதியில் அரசு அதிகாரிகள் எவரும் வந்து பார்வையிடவில்லை எனவும்,உடனே அடிப்படை வசதிகள் செய்து தரவும், பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.