உரிய அனுமதியில்லாத கட்டிடம்... நாகர்கோவிலில் பிரபல நகைக்கடைக்கு சீல்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இயங்கி வரும் ஜாய் ஆலுக்காஸ் தங்க நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 55 கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி, குமரி மாவட்டம் முழுவதும் பல கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ராம்ராஜ் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில், ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இயங்கி வந்தது. ஏற்கனவே இந்த கட்டிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நோட்ஸ் அனுப்பினர்.
இதனை எதிர்த்து ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த 28 ஆம் தேதி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று அந்த கட்டிடத்திற்கு நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உடுப்பி ஹோட்டலுக்கு சீல் வைப்பு
இதேபோல விதிமுறைகளை மீறியும் உரிய அனுமதி இன்றியும் பல அடுக்கு மாடி கட்டிடங்களுடன் கட்டப்பட்ட உடுப்பி இன்டெர்னேஷனல் ஹோட்டல், விடுதி, திருமண மண்டபம் உட்பட பல்வேறு கட்டிடங்களுக்கும் நகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்தனர்.
நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி பெறாமலும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக நாகர்கோவில் நகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 58 பல மாடி கொண்ட கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி நீதிமன்ற உத்தரவு பெற்று சமீபமாக குமரி மாவட்டம் முழுவதும் பல கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல உடுப்பி இன்டெர்னேஷனல் நிறுவனம், விடுதி, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஏற்கனவே இந்த கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நோட்ஸ் அனுப்பினர்.
இதனை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை கடந்த 28 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு விதிமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்தனர்.