டெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை
கன்னியாகுமரி: டெல்லியில் காற்று மாசை குறைக்க விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என விஞ்ஞானி சிவதாணு பிள்ளை புதிய யோசனையை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் 8 இடங்களில் சுவாசிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறைக்க மழை வந்தால்தான் என்ற நிலையில் தலைநகர் இருக்கிறது. தீபாவளி பண்டிகையால் மேலும் காற்று மாசடைந்தது.
இதன் தாக்கம் சென்னைக்கும் வந்துவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சிவதாணு பிள்ளை கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கு பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரிப்பதே ஆகும்.
இந்த விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்து அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும் என்றார்.
தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்