கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை- கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை
கன்னியாகுமரி: தமிழக காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி களியாக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ந் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது தொடர்பான விசாரணையில் வில்சனை படுகொலை செய்தது தெளபீக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக கேரளாவின் பூந்துறையில் ரபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரளாவில் மேலும் 6 சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.
கொல்லம் அருகே தென்மலை என்ற இடத்தில் 6 பேரும் சிக்கியுள்ளனர். இவர்களில் கொலையாளி அப்துல் சமீமும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 6 பேரும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, சந்தேக நபர்களை செல்போன் டவர் மூலம் தமிழக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது தெரியவந்துள்ளது.