கன்னியாகுமரியில் விமான நிலையம்... ஆய்வுப்பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடி முனையான குமரியில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளதால் அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மதுரை அல்லது திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து தான் கன்னியாகுமரி செல்லவேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியிலேயே விமான நிலையம் அமைக்கப்பட்டால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாவதோடு, வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகம் பயன்பெறுவர்.
வட்டிக்கு பணம் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ரஜினி!
காஷ்மீர் டூ குமரி
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், ஆயுர்வேத சிகிச்சை ஸ்தலங்கள், திற்பரப்பு அருவி, என சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் எண்ணற்ற இடங்கள் குமரியை சுற்றி உள்ளன. இதைத்தவிர சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் அதிகாலையிலேயே குமரி கடலில் குவியத் தொடங்குவர். இப்படி எண்ணற்ற சிறப்புவாய்ந்த கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை.
ஆய்வறிக்கை
இதனிடையே குமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்தப்பட்டது. அதன் ஆய்வறிக்கையும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த இடம் விமான நிலையம் அமைக்க உகந்த இடம் இல்லை என விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதனால் விமான நிலையம் அமைக்கும் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி எம்.பி.வசந்த்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் மீண்டும் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆய்வுப்பணி
கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மீண்டும் நேற்று தொடங்கியுள்ளன. இந்த ஆய்வு ஒரு வாரத்திற்கு நடைபெறும் எனத் தெரிகிறது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நில அளவீடு, ஆய்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. அந்த நிறுவன நிபுணர்களுடன் தமிழக அரசின் நில அளவையர்கள் 5 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆய்வறிக்கை அடுத்த வாரத்தில் தயார் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
15 கி.மீ.தூரம்
முதற்கட்டமாக 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதி நவீன கருவிகளை கொண்டு துல்லியமாக நில அளவீடு செய்யப்படுகிறது. ஆய்வறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பு உயர் அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.