தமிழகத்தை மோடி புறக்கணிக்கிறார்... மோடியை தமிழகம் புறக்கணிக்கிறது... வசந்த குமார் சுளீர் சுளீர்
கன்னியாகுமரி: அதிமுக மற்றும் பா.ஜ.க. விற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆரூடம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இன்று வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கிறார் என அனைத்து தரப்பு மக்களும், அரசியல் பிரமுகர்களும் கூறி வருவதை பிரதமர் நிரூபித்து வருகிறார் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும், அதனால் தான் உறுப்பினர்கள் இல்லாத தமிழகத்திற்கு நாம் எதற்கு செல்ல வேண்டும் என பிரதமர் நினைப்பதாக கிண்டலாக கூறினார்.
அதிமுக அமைச்சர்கள் மீது புகார்கள் உள்ளது. அதன் ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கி உள்ளது. அதன் காரணமாக, அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறிய வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் விவசாயிகள் வாழ்வு இழந்து உள்ளார்கள்.
இதனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி என்பது முடியாத காரியம் என்றும், தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட அதிமுகவிற்கோ, பா.ஜ.க. விற்கோ கிடைக்காது என்று தெரிவித்தார். மேலும், அதிமுக மற்றும் பா.ஜ.க. கட்சிகளின் வரலாறு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு முடிவடையும் என்றார்.