தமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
கன்னியாகுமரி: தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் தேவை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் துணை கொள்கை பரப்புச்செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அவரது மரணத்திற்கு சசிகலா தரப்புதான் காரணம் என குற்றம்சாட்டினார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சசிகலா தரப்புக்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் கட்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் தினகரனிடம் இருந்து விலகினார்.
செய்தியாளர் சந்திப்பு
இதைத்தொடர்ந்து எந்தக்கட்சியிலும் சேராமல் அமைதியாக இருந்த நாஞ்சில் சம்பத் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தல் மூலம் பதில்
அப்போது தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு தேர்தல் மூலம் பதில் கூறியுள்ளனர் என்றார்.
தேர்தல் கணக்கு தோற்றது
நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை மனதில் வைத்து மக்கள் பாஜகவை தூக்கியெறிந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக போட்ட தேர்தல் கணக்கு தோல்வியடைந்துவிட்டது.
கூட்டணி வைத்தன் பலன்
தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணிவைத்தற்கான பலனை தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அனுபவித்து வருகின்றன.
ஸ்டாலின் ஆட்சிதான் தேவை
தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தேவை அது காலத்தின் கட்டாயம் யாரும் எதுவும் செய்யமுடியாது. திமுகவின் கொள்கையும் மதிமுகவின் கொள்கையும் ஒன்றுதான். ஆகையால் வைகோ திமுகவுடன் மீண்டும் இணைந்து தமிழகத்திற்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.