தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதன் எதிரொலி... தமிழகத்தில் பரவலாக மழை
கன்னியாகுமரி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மித மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. நாகர்கோவில், குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய இடங்களில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இலங்கையில் மழைக்கு இடையே மோடியை வரவேற்ற சிறிசேனா
தொடர் மழை காரணமாக, கோதையாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக, திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை தினங்களில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூடுவது வழக்கம். தற்போது மழை பெய்து, தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அருவியில் உற்சாக குளியல் போட்டு பயணிகள் மகிழ்ந்தனர்.
அங்குள்ள நீச்சல் குளத்திலும் குளிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பெய்யும் மழையால், கன்னியாகுமரி பசுமையாக மாறியுள்ளது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவுகிறது.
இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதே போல், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யும் பரவலான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் விநாடிக்கு 791 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் விநாடிக்கு 971 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதே நேரம், நீர் வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டமானது தொடர்ந்து சரிந்துவருகிறது. அந்த வகையில், 45.69 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 45.66 அடியாக சரிந்து, நீர் இருப்பு 15.188 டிஎம்சியாக உள்ளது.