தீவிரவாதிகளுக்கு வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்போம்… பிரதமர் மோடி காட்டம்
Recommended Video
குமரி: இது புது இந்தியா, தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் பல்லாயிரகணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று துவக்கி வைத்த நலத் திட்டங்கள் இவைதான்
மோடி உருக்கம்
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சிலர் ஊழலை வாழ்க்கை முறையாக கொண்டுள்ளனர்; ஆனால் நான் ஊழலை அனுமதிக்கமாட்டேன் என்றார். நான் இன்று இருப்பேன்; நாளை சென்றுவிடுவேன்; ஆனால் இந்தியா எப்போதும் இருக்கும் என உருக்கமாக பேசினார்.
தமிழர்கள் என்பதில் பெருமை
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானி அபிநந்தன் ஆகியோர் தமிழர்கள் என்பதில் பெருமை என்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூர், மும்பை என பல இடங்களில் முன்பு வெடிகுண்டுகள் வெடித்தன. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக மக்கள் எதிர்பார்த்த எதையும் முந்தைய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், புல்வாமாவில் தாக்குதல் நடந்ததும் நமது ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்பதை பாருங்கள் என்று குறிப்பிட்டார். துணிச்சல் மிகுந்த ராணுவத்தினருக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
மும்பை தாக்குதலுக்கு பிறகு விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த முடிவு செய்தது, அரசு தடுத்தது என்றும் ஆனால், இன்றைய காலகட்டத்தில், நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது புது இந்தியா, தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.