ஒரு தலை காதல்.. மறுத்த மாணவி.. வீட்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்.. குமரியில் வேன் டிரைவர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் தப்பியோடிய வேன் டிரைவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அப்போது மாத்திரைகளை விழுங்கி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி குருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் வினு(26). வேன் டிரைவரான இவர் பக்கத்து தெருவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து வேன் டிரைவர் வினு பள்ளி மாணவியிடம் தனது காதலை எடுத்து கூறியும் மாணவி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே விரக்தியில் இருந்தார் வினு.
பெண்களை தேடி தேடி கொன்ற சீரியல் கில்லர்.. கிணற்றில் கிடந்த இளம் பெண்களின் உடல்.. ஹைதராபாத்தில் பகீர்
வலுக்கட்டாயம்
நேற்று காலை மாணவி வீட்டிலிருந்து அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்லும் போது வினுவின் வீட்டருகே வந்த போது உள்ளே இருந்து ஆவேசமாக வெளியே வந்தார் வினு. அப்போது மாணவியின் வாயில் துணியை திணித்து வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்.
வினு தப்பி ஓட்டம்
பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வினுவின் வீட்டை முற்றுகையிட்டு கதவை திறக்க முயற்சித்த போது வினு மாணவியை வீட்டில் விட்டு தப்பியோடினார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து பொதுமக்கள் மாணவியை மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர் கொற்றியோடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
போக்ஸோ சட்டம்
இதனையடுத்து இந்த வழக்கு மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வேன் டிரைவர் வினு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கைது
அவரை தேடிவந்த நிலையில் கப்பியறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது வினு வீட்டில் இருந்த பழைய மாத்திரைகளை எடுத்து விழுங்கி போலீசாருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சிறையில்
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வரும் வினு நாளை சிறையில் அடைக்கப்பட உள்ளார்.