அண்ணாச்சி விட்டுச்சென்ற பணிகளை நீங்கள் தொடரனும்... விஜய் வசந்தை அரசியலுக்கு அழைக்கும் அபிமானிகள்
கன்னியாகுமரி: வசந்தகுமார் மறைவை அடுத்து அவர் விட்டுச்சென்ற மக்கள் பணிகளை தொடர அவரது மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர் அபிமானிகள்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் விஜய் வசந்திற்கு காங்கிரஸ் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
தற்போது வசந்த அன் கோ நிர்வாகத்தை கவனித்து வரும் விஜய் வசந்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜயகாந்த் காலில் விழுந்த கருணாநிதி.. சுதீஷ் போட்ட கார்ட்டூன், தேமுதிகவினர் ஷாக்.. வேகமாக நீக்கினார்
புன்னகை மன்னன்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் உடல்நலக் குறைவால் கடந்த 28-ம் தேதி மாலை காலமானார். அவரது மறைவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது. எப்போதும் புன்னகை மன்னனாக வலம் வந்த வசந்தகுமார் மாற்றுக்கட்சியினரை கூட மதித்து போற்றக் கூடியவர். பிரச்சாரம், பொதுக்கூட்டம் என எந்த இடத்திலும் தனி மனித விமர்சனத்தை முன் வைக்காதவர் வசந்தகுமார்.
விஜய் வசந்த
வசந்தகுமாருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதில் இளைய மகன் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வசந்த் அன் கோ நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வருகிறார். மூத்த மகன் விஜய் வசந்த் திரைப்படங்களில் நடித்து வருவதோடு நிறுவன கணக்கு வழக்குகளையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் வசந்தகுமாரின் மூத்த மகன் விஜய் வசந்தை அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தையின் அபிமானிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தனித்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்தப்படுமா என்ற விவரம் தெரியவில்லை. கன்னியாகுமரி தொகுதிக்கு தனித்து இடைத்தேர்தல் நடத்தினால் தமிழகத்தில் காலியாக உள்ள சேப்பாக்கம், திருவொற்றியூர், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் 2021 சட்டமன்ற பொதுதேர்தலுடன் இணைத்து நடத்தவே அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.
யாருக்கு சீட்
அவ்வாறு தேர்தல் நடக்கும்பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என இப்போதே கோரிக்கை குரல்கள் எழுவதை காண முடிகிறது. தற்போதைய நிலவரப்படி ரூபி மனோகரன், விஜய் வசந்த் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான்கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சீட் வழங்கும்என அக்கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.