முதலில் தொழில்... பிறகு அரசியல்... நிதானமாக அடியெடுத்து வைக்கும் வசந்தகுமார் மகன்..!
கன்னியாகுமரி: மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் தனது தந்தை கட்டிக்காத்து வந்த தொழில் சாம்ராஜ்யத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார்.
வசந்தகுமாரின் 16-ம் நாள் காரியத்துக்காக கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள விஜய்வசந்தை கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.
அவர்களிடத்தில் பேசும் விஜய் வசந்த், தம்மை பொறுத்தவரை முதலில் தொழில் பிறகு தான் அரசியல் எனக் கூறி வருகிறாராம்.
அரியர் ரத்து விவகாரத்தில் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது - அரசு மீது உதயநிதி குற்றச்சாட்டு
வசந்தகுமார்
தமிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பியாக இருந்தவருமான வசந்தகுமார் கடந்த மாதம் 28-ம் தேதி காலமானார். இதையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
மனதில் என்ன?
அரசியலா? தொழிலா? என்ற குழப்பத்தில் இருந்து வந்த விஜய் வசந்த் முதலில் தொழிலில் கவனம் செலுத்துவது என்றும் பிறகு அரசியலை பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறார். தமிழகம், கேரளா, என 70-க்கும் மேற்பட்ட வசந்த் அன் கோ ஷோரூம்கள் உள்ள நிலையில் அவற்றின் கணக்கு வழக்குகளை முழுநேரமாக கவனித்து தனது தந்தை கட்டமைத்த தொழில் சாம்ராஜ்யத்தை இன்னும் பரவலாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறாராம்.
அப்பாவின் அறிவுரை
வசந்தகுமார் உயிருடன் இருந்தபோது தமது இரண்டு மகன்களுக்கும் அவர் அடிக்கடி கூறிய அறிவுரைகள், ''தொழில் இருந்தால் தான் எல்லாம், அது இல்லை என்றால் யாரும் மதிக்கமாட்டார்கள், அதனால் தொழில் மீதான கவனத்தை சிதறவிடாதீர்கள்'' என்பது தான். தற்போது தந்தையின் அறிவுரைக்கேற்ப விஜய் வசந்தின் முடிவுகள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
என்ன பேசினார்?
விஜய் வசந்திற்கு மிகவும் நெருக்கமான நாடார் சங்க பிரமுகர் ஒருவரிடம் நாம் பேசிய போது அவர் கூறியதாவது, '' அண்ணாச்சி இடத்தை நிச்சயம் விஜய் வசந்த் நிரப்புவார். ஆனால் எங்களிடம் பேசியதை வைத்து பார்த்தால் தொழிலுக்கு முன்னுரிமை தர விருப்பப்படுகிறார் எனத் தோன்றுகிறது. அதற்காக அவர் அரசியலுக்கு வரமாட்டார் என நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். காங்கிரஸ் மேலிடத்திற்கு அண்ணாச்சிக்கு இங்குள்ள செல்வாக்கு பற்றி நல்லா தெரியும். அதனால் அவர் மகனுக்கு தான் எப்படியும் வாய்ப்பு கொடுக்கும் என நம்புகிறோம்'' என்கிறார்.